ஆந்திர மாநில மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும்: ராகுல் காந்தி


ஆந்திர மாநில மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 21 Nov 2021 2:23 PM GMT (Updated: 21 Nov 2021 2:23 PM GMT)

ஆந்திர மாநில மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

தமிழ்நாட்டைப்போல அண்டை மாநிலமான ஆந்திராவிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

குறிப்பாக ஆனந்தபூர், கடப்பா, நெல்லூர், சித்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்மழையால் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாகவும் கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஆந்திராவில் தொடர்ந்து பெய்த  கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 17 பேர் கதி என்ன? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.  தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினரும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். 

இந்த நிலையில் ஆந்திர மாநில மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளம், பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரத்தில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு என ஆழ்ந்த அனுதாபம். கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Next Story