மராட்டியம்: 5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - நைஜீரிய நாட்டவர் கைது
மராட்டியத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வைத்திருந்த நைஜீரியர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைவிருந்தில் பங்கேற்ற ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட பலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் மும்பை நகர் சப்-அர்பன் வாடாலா பகுதியில் போதைப்பொருள் கடத்தல் அரங்கேறி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து அப்பகுதியில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, நைஜீரிய நாட்டை சேர்ந்த நபரை சுற்றிவளைத்த போலீசார் அவர் வைத்திருந்த கைப்பைகளில் சோதனை நடத்தினர். அதில், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து போதைப்பொருள் வைத்திருந்த நைஜீரியரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story