விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்ததாக புகார்: நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு


விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்ததாக புகார்: நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 23 Nov 2021 4:41 PM GMT (Updated: 23 Nov 2021 4:41 PM GMT)

விவசாயிகளை தீவிரவாதிகள் என்று விமர்சனம் செய்ததாக நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பை, 

நடிகை கங்கனா ரணாவத் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார். இதற்காக அவரது டுவிட்டர் கணக்கு கடந்த மே மாதம் முடக்கப்பட்டது. தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் கருத்துகளை கூறி வருகிறார். 

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது குறித்து நடிகை கங்கனா ரணாவத் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்தாா். அதில், அவர் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை (காலிஸ்தான்) பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டிருந்தார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, சீக்கியர்களை அவரது காலணியில் போட்டு நசுக்கினார் எனவும் மறைமுகமாக தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து சீக்கியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது சீக்கிய அமைப்பினர் மும்பை போலீசில் புகார் அளித்தனர். 
இதுதொடர்பாக டெல்லி சீக்கிய குருத்துவாரா மேலாண்மை கமிட்டி தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா தலைமையில் அதன் பிரதிநிதிகள் கார் போலீஸ் நிலைய அதிகாரியிடம் புகார் மனுவை அளித்தனர்.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் தங்களுக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் கங்கனா ரணாவத் மீது மும்பை போலீசார், இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 295A-ன் (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், ஒரு வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை சீற்றம் செய்யும் நோக்கம்) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


Next Story