எனது திருமணத்திற்கு நடிகர் துனியா விஜய் வரவில்லை என்றால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் - இளம் ரசிகை ஆவேசம்


எனது திருமணத்திற்கு நடிகர் துனியா விஜய் வரவில்லை என்றால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் - இளம் ரசிகை ஆவேசம்
x
தினத்தந்தி 24 Nov 2021 12:32 PM GMT (Updated: 24 Nov 2021 12:32 PM GMT)

எனது திருமணத்திற்கு நடிகர் துனியா விஜய் வரவில்லை என்றால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று அவரது இளம் ரசிகை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு,

தாவணகெரே டவுன் ராமநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்த். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவரும், இவரது மனைவி, மகள்கள் அனைவரும் பிரபல நடிகர் துனியா விஜயின் தீவிர ரசிகர்கள் என்று கூறப்படுகிறது. துனியா விஜயின் அனைத்து படங்களையும் இவர்கள் தவறாமல் பார்த்து வந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிவானந்த், புதிதாக வீடு கட்டினார். தனது வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு நடிகர் துனியா விஜய் வர வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அதற்காக தீவிர முயற்சியும் மேற்கொண்டார்.

இந்த விஷயம் அறிந்த நடிகர் துனியா விஜய் கிரகப்பிரவேஷம் தினத்தன்று சிவானந்தின் வீட்டுக்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் சிவானந்த், தனது மூத்த மகள் அனுஷாவிற்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளார். வருகிற 29-ந் தேதி அனுஷாவிற்கு தாவணகெரே டவுனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடக்க உள்ளது.

இந்த நிலையில் தனது திருமணத்திற்கு நடிகர் துனியா விஜய் வந்தால்தான் தாலி கட்டிக்கொள்வேன் என்று அனுஷா அடம்பிடிக்கிறாராம். இதையடுத்து தனது மகளின் திருமணத்திற்கு நடிகர் துனியா விஜயை அழைக்க சிவானந்த் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் துனியா விஜய்க்கு கூரியர் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் மகளின் திருமண பத்திரிகையை சிவானந்த் அனுப்பி வைத்துள்ளார். இதனால் துனியா விஜய், அனுஷாவின் திருமணத்திற்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி அனுஷா கூறுகையில், ‘‘நாங்கள் துனியா விஜயின் தீவிர ரசிகர்கள். எங்கள் வீட்டுக்கும் துனியா குணா என்று அவரது பெயரைத்தான் வைத்துள்ளோம். என்னுடைய திருமணத்திற்கு அவர் வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் திருமணத்தை நிறுத்தி விடுவேன்’’ என்று கூறினார்.

Next Story