ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர் குழு: சுப்ரீம் கோர்ட்டு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Nov 2021 10:31 PM GMT (Updated: 24 Nov 2021 10:31 PM GMT)

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டு சூசகமாக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரும் அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, அப்பல்லோ தரப்பு மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் ஆஜராகி, ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பில் புதிய ஆவணங்கள் இன்று (நேற்று) காலை 10.41 மணிக்கு எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என ஆட்சேபனை தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், அவற்றுக்கு பதில் மனு தாக்கல் செய்யுங்கள் என்றனர்.

அதைத் தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணைய தரப்பு மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் வாதிடுகையில், ஆணைய விசாரணை ஒரு அறையில் பொது விசாரணையாக நடைபெற்று வருகிறது. காணொலி விசாரணை என அப்பல்லோ தரப்பு தெரிவிப்பது தவறு. சிறிய அறை என்பதால் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் விடுத்த கோரிக்கையை ஆணையம் ஏற்க முடியவில்லை. ஆணையத்துக்கு உதவவும், விசாரணையை முடிவு செய்யவும் எய்ம்ஸ் போன்ற ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவ நிபுணர்கள் குழுவை நியமிக்க மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிட்டால் ஆணையத்துக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய ஆணையத்துக்கு ஆட்சேபனை உள்ளதா என கேட்டனர். அதற்கு ஆறுமுகசாமி ஆணைய வக்கீல் ரஞ்சித்குமார், இல்லை என தெரிவித்தார். உணவு இடைவேளைக்கு முன் அப்பல்லோ வக்கீல் சுந்தரம், இந்த வழக்கு தொடர்பாக அப்பல்லோ மருத்துவ நிர்வாகத்திடம் ஆலோசிக்க வேண்டும். எனவே எவற்றையெல்லாம் ஆலோசித்து கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டார்.

அதற்கு நீதிபதிகள், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவிடப்படும் என சூசகமாக தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பானுமதி அல்லது இப்ராகிம் கலிபுல்லாவை கொண்டு, ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற அப்பல்லோவின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். மேலும், ஆணையத்தை தற்போதை நிலையில் விரிவுபடுத்தினால் அது சிரமங்களை உருவாக்கும் என்றும் கருத்து தெரிவித்தனர். குறுக்கு விசாரணைக்குத் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வழங்கவும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்து உத்தரவிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின்போது, ஆணையம் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் எவ்வித பாரபட்சமும் இல்லை என்றும், செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பில் வக்கீல் ரஞ்சித்குமார் தெரிவித்தார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணை நாளையும் (இன்று) தொடரும் என தெரிவித்தனர்.

Next Story