வரும் 29ந்தேதி வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021 தாக்கல்
வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021, வருகிற 29ந்தேதி குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை அன்று 3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்றும் அமைக்கப்படும் என்றும் கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதன்பின்பு, கடந்த 24ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரைவு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டது. இதனால் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பட்டியலில் வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021 இடம்பெற்று உள்ளது.
இதன்மூலம், இம்மாதம் 29ந்தேதி தொடங்க உள்ள மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021, வருகிற 29ந்தேதி குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Related Tags :
Next Story