மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ், யாருடனும் கூட்டணி இல்லை: சித்தராமையா


மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ், யாருடனும் கூட்டணி இல்லை: சித்தராமையா
x
தினத்தந்தி 27 Nov 2021 8:04 PM GMT (Updated: 27 Nov 2021 8:04 PM GMT)

மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் யாருடனும் கூட்டணி அமைக்காது என்று சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.

மேல்-சபை தேர்தல்

கர்நாடகத்தில் 25 மேல்-சபை உறுப்பினர்கள் பதவிகளுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மைசூருவுக்கு வந்தார். அவர் மைசூரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 10-ந் தேதி மாநிலம் முழுவதும் மேல்-சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காது. யாருடனும் கூட்டணி அமைக்கும் திட்டமும் இல்லை.

மக்களுக்கு தெரிந்துவிட்டது

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறோம். பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. சமீபத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது தெளிவாக மக்களுக்கு தெரிந்து விட்டது.

பெலகாவியில் லகன் ஜார்கிகோளி சுயேச்சையாக போட்டியிடுகிறார். இது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது. ஆனால் பா.ஜனதாவுக்கு பின்னைடவை ஏற்படுத்தும். குடகு மாவட்டத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பா.ஜனதாவினர் தோல்வி

ஏ.மஞ்சு காங்கிரஸ் கட்சிக்கு வந்தாலும் அவரை சேர்த்துக் கொள்ள மாட்டோம். பா.ஜனதா ஆட்சியின் அராஜகம் குறித்து கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம். மாநிலத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது. ஜனநாயகம் மீது அரசுக்கு அக்கறை இல்லை. ஆட்சி நடத்துவதில் பா.ஜனதாவினர் தோல்வி அடைந்துவிட்டனர்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story