கொரோனா பாதிப்பு : ராணுவத்தில் 190 பேர் உயிரிழப்பு - நாடாளுமன்றத்தில் தகவல்


கொரோனா பாதிப்பு : ராணுவத்தில் 190 பேர் உயிரிழப்பு - நாடாளுமன்றத்தில் தகவல்
x
தினத்தந்தி 30 Nov 2021 7:35 AM GMT (Updated: 30 Nov 2021 7:35 AM GMT)

கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஆரம்பித்த நேரம் முதற்கொண்டு, தடுப்பு பணியில் ராணுவம் தீவிரமாக பணியாற்றியது.

புதுடெல்லி, 

கொரோனா பாதிப்பு காரணமாக பாதுகாப்பு படையினர் 190 பேர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 137 பேர் தரைப்படையை சேர்ந்தவர்கள்.

கொரோனா மரணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணை மந்திரி  அஜய் பட் பதில் அளித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கொரோனா பேரிடர் காலத்தின்போது ராணுவத்தின் தரைப்படையில் 45,576 பேருக்கும், விமானப்படையில் 14,022 பேருக்கும், கடற்படையில் 7,747 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினர் 1,311 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 114 பேர் விமானப்படையில் பணியாற்றுவோரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

ராணுவத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களில் 276 பேர் உயிரிழந்துள்ளனர். விதிமுறைப்படி தொற்று நோயால் உயிரிழந்தவர்களுக்கு சிறப்பு இழப்பீடு ஏதும் அளிக்கப்படவில்லை. ஆனால் பணியின் போது உயிரிழந்தால் கிடைக்கும் பலன்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story