பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீர் சந்திப்பு


பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 30 Nov 2021 9:14 PM GMT (Updated: 30 Nov 2021 9:14 PM GMT)

டெல்லியில் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீரென சந்தித்து பேசினார்.



பெங்களூரு,

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முன்னாள் பிரதமரும் மாநிலங்களவை உறுப்பினருமான தேவகவுடா, பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்.

அவரை சந்திக்க நேற்று பிரதமர் அலுவலகம் சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், இடையில் பிரதமர் மோடியை சந்திக்க தேவகவுடா வந்தார். வழக்கமாக யார் சந்திக்க வந்தாலும் பிரதமர் மோடி அவர்களை அறையில் அமர வைத்து பேசுவது வழக்கம்.

ஆனால் தேவகவுடா வருவதற்கு முன் வாசலில் காத்திருந்த மோடி, அவரை கை கூப்பி வணங்கி மிகவும் மரியாதை மற்றும் கவுரவத்துடன் கையை பிடித்து அழைத்து வந்து இருக்கையில் அமர்த்தினார். அவரிடம் உடல் நலம் விசாரித்தார். இருவரும் தனிமையில் பேசினர்.

தேவகவுடாவை சந்தித்து பேசிய தருணம் எனது வாழ்நாளில் மறக்க முடியாதது என்று பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில், படத்துடன் வெளியிட்டு பதிவு செய்துள்ளார். இந்த சந்திப்பின்போது, கர்நாடக மாநில அரசியல் சூழ்நிலை, மேலவை தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை பற்றி பேசப்பட்டது என்று கூறப்படுகிறது.



Next Story