2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 300 இடங்களை வெல்ல முடியாது - குலாம் நபி ஆசாத்


2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 300 இடங்களை வெல்ல முடியாது - குலாம் நபி ஆசாத்
x
தினத்தந்தி 2 Dec 2021 7:21 AM GMT (Updated: 2 Dec 2021 7:21 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை திரும்ப பெறுவது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர், குலாம் நபி ஆசாத் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மோடி அரசு ரத்து செய்தது. அதன்பின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. 

மத்திய அரசின் இந்த முடிவுக்கு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும், மீண்டும் மாநில அந்தஸ்தை காஷ்மீருக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்தன. ஆனால், மத்திய அரசு எதற்கும் இசைந்தபாடில்லை.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று  நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு காங்கிரஸ் மூத்த தலைவர், குலாம் நபி ஆசாத் பேசும் போது கூறியதாவது:-

“பிரிவு 370 குறித்து உச்ச நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் அல்லது ஆளும் அரசு அதைச் செய்ய முடியும். ஆனால் ரத்து செய்தவர்கள் அதனை எப்படி செய்வார்கள்? 

இந்த முடிவை திரும்பப் பெற, காங்கிரசுக்கு 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு தேவை. தற்போதைய சூழ்நிலையில், 2024 தேர்தலில் 300க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை. 

கடவுள் விரும்பினால், இந்த இலக்கை நாம் அடைய முடியும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் வாய்ப்புகள் இருண்டவையாக உள்ளன” என கூறினார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்துவந்த  காங்கிரஸ் கட்சி, 2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. 

மொத்தம் 543 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியாக அந்தஸ்து பெற ஒரு கட்சிக்கு 55 எம்.பிக்கள் இருக்க வேண்டும். ஆனால்,  காங்கிரஸ் கட்சியில் 44 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர். 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இம்முறையும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சியாகும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி இழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story