தடுப்பூசி செலுத்தியிருந்தால் ஒமைக்ரான் பாதிப்பு எப்படி இருக்கும்?- மத்திய அரசு விளக்கம்


தடுப்பூசி செலுத்தியிருந்தால் ஒமைக்ரான் பாதிப்பு எப்படி இருக்கும்?- மத்திய அரசு  விளக்கம்
x
தினத்தந்தி 3 Dec 2021 10:28 AM GMT (Updated: 3 Dec 2021 10:33 AM GMT)

தடுப்பூசி செலுத்தியிருந்தால் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு எப்படி இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி , 

‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. 

இந்தியாவில் 2 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் இருவரில் ஒருவர் 46 வயதான மருத்துவர், மற்றொருவர் 66 வயதானவர்.இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலைத் தொடர்பாளர்கள், 2-ஆம்  நிலைத் தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு ஏறக்குறைய 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் வேகமாக பரவுகிறது. அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ‘ஒமைக்ரான்’ கால்பதித்து விட்டது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் மொத்தம் 29 நாடுகளில் ஒமைக்ரான் பரவி 373 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.  இவற்றில் தென்ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அடங்கும்.  சமீபத்தில் இந்த பட்டியலில் கானா, நைஜீரியா, நார்வே, சவுதி அரேபியா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவல் ஏற்பட்டு உள்ளது.

ஒருவர் தடுப்பூசி செலுத்தியிருந்தாலோ அல்லது ஏற்கெனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டால் நோயின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும். ஏனென்றால் டெல்டா வைரசால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டு மீண்டுவிட்டார்கள் என்று செரோ சர்வே மூலம் தெரியவந்துள்ளது. 

2-வதாகத் தடுப்பூசி செலுத்தும் வீதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒமைக்ரான் பாதிப்பின் வீரியம் இந்தியாவில் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இன்னும் வரவில்லை.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவிவிட்டது. ஆனால், தொற்றின் அளவும், பரவல் வீதமும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பகுதியினர் டெல்டா வகை வைரஸ் மற்றும் முதல் அலையில் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் என செரோ சர்வேயில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். ஆதலால், ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் இருந்தாலும் அதன் வீரியம் குறைவாகவே இருக்கும்.

கொரோனா வைரஸ் திரிபுகளை எதிர்த்துப் போரிடத் தடுப்பூசி முக்கிய ஆயுதம். ஒமைக்ரான் வைரசால் தீவிரமாகப் பாதிக்கப்படாமல் தடுக்கும் கேடயமாகத் தடுப்பூசி இருக்கும் என்பதால், தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். முதல் கட்ட ஆய்வில் பரவல் வேகம் ஒமைக்ரானில் அதிகம் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story