பிபின் ராவத் இறப்பு குறித்து அவதூறு: பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகளின் மீது வழக்குப்பதிவு..!


பிபின் ராவத் இறப்பு குறித்து அவதூறு: பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகளின் மீது வழக்குப்பதிவு..!
x
தினத்தந்தி 12 Dec 2021 2:58 PM GMT (Updated: 12 Dec 2021 2:58 PM GMT)

பிபின் ராவத் இறப்பு குறித்து அவதூறு பரப்பியதாக பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி அடுத் த நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அவர்களின் மறைவுக்கு மொத்த இந்தியாவே துக்கம் அனுசரித்தது. நாடு முழுக்க மக்கள் பலர் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே சிலர் பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்தது. மேலும் இதை பற்றி விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிவரும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகவும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் இரண்டு பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகளின் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story