வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு


வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2021 8:06 PM GMT (Updated: 17 Dec 2021 8:06 PM GMT)

விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவது அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் உள்பட 3 பேர் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்த 5 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

இதையடுத்து, கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதுடன், வெளிநாட்டு பயணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து நேற்று பெங்களூருவுக்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர்களது உடைமைகள் உள்ளிட்டவை கிருமி நாசனி தெளிக்கப்பட்டும், அவர்களுக்கு கவச உடை அணிவித்தும் விமான நிலையத்தில் இருந்து பவுரிங் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். 

தற்போது 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் சளி மாதிரிகள் பெறப்பட்டு, அவர்கள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story