8 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த மத்திய அரசு கடிதம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 Dec 2021 10:04 PM GMT (Updated: 30 Dec 2021 10:04 PM GMT)

தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி கடிதம் எழுதி உள்ளது.

புதுடெல்லி, 

சீனாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இன்று உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலை உள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை இறுதிக்கட்டத்துக்கு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக நிலைமை மாறி உள்ளது.

டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், கர்நாடகம், ஜார்கண்ட் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதையொட்டி, இந்த மாநிலங்களுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி மத்திய அரசின் சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.

திடீர் எழுச்சி

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-

* தமிழ்நாட்டில் சென்னை, மராட்டியத்தில் மும்பை, மும்பை புறநகர், புனே, தானே, நாக்பூர், கர்நாடகத்தில் பெங்களூரு நகர்ப்புறம் மற்றும் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா, அரியானாவில் குர்கான் ஆகிய இடங்களில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பில் திடீர் மற்றும் குறிப்பிடத்தக்க எழுச்சி பதிவாகி உள்ளது.

* உள்ளூர் பயணங்கள், திருமணங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள் போன்றவற்றால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தீவிர கண்காணிப்பு வேண்டும்

* குளிர்காலம் தொடங்கியுள்ள சூழலில், சுற்றுச்சூழல் மாசுபடுவது அதிகரித்து இருப்பதால் காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

* சில மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. இரட்டிப்பாக ஆவதற்கான நேரம் குறைந்துள்ளது. இந்த நோய் மேலும் பரவாமல் இருப்பதையும் அல்லது தாமதமாக கண்டறிவதால் இறப்பு அதிகரிக்கும் சூழ்நிலையை அடையாமல் இருப்பதையும் உறுதி செய்ய முன்கூட்டியே கவனிக்க வேண்டும்.

கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துங்கள்

* மேலே குறிப்பிட்ட மாநிலங்கள், பரிசோதனைகளை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் துரித பரிசோதனை ஆகியவற்றுக்கு இடையேயான விகிதத்தை பராமரிக்க வேண்டும். பாதிப்புக்கு ஆளாவோர் தொடர்புகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு பரிசோதனையும் நடத்த வேண்டும். தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும்.

* கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதைய நிலையான வழிகாட்டும் நெறிமுறைகள்படி கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்க வேண்டும். ஆஸ்பத்திரிகளை தயார் நிலையில் வலுப்படுத்த வேண்டும். கொரோனா நிதி ஆதாரங்களை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதில் வேகம் காட்டவேண்டும். கூடுதலான பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். கொரோனா கால கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story