கொரோனா பரவல் அதிகரிப்பு: மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் மன்சுக் மாண்டவியா விரிவான ஆலோசனை


கொரோனா பரவல் அதிகரிப்பு: மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் மன்சுக் மாண்டவியா விரிவான ஆலோசனை
x

ஒமைக்ரான் அச்சுறுத்தல் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி  மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை மந்திரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஒமைக்ரான் அச்சுறுத்தல் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

நாட்டில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் அது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

‘கொரோனா பரிசோதனை, பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல்’ ஆகிய நான்கு செயல்முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதை மத்திய சுகாதாரத்துறை மந்திரி வலியுறுத்தி பேசினார்.

“நாம் இதற்கு முன் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போர் புரிந்துள்ளோம். கடந்த காலங்களில் கற்ற பாடங்களை பயன்படுத்தி ஒமைக்ரானுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது.

அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை கையாளும் விதத்தில் சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மாநிலங்கள் கொரோனா கால நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும்.மாநிலங்கள் தங்களுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை தெரியபடுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூட்டத்தில் பேசினார்.

மேலும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கொரோனாவை முறையாக கையாள பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், கொரோனா சங்கிலையை உடைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும்  இந்த ஆலோசனை  கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 

Next Story