நமது தடுப்பூசி திட்டம் நிறைய உயிர்களை காப்பாற்றியுள்ளது - பிரதமர் மோடி
நமது தடுப்பூசி திட்டம் நிறைய உயிர்களை காப்பாற்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 150 கோடியே 63 லட்சத்து 30 ஆயிரத்து 265 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் 88 கோடியே 23 ஆயிரத்து 92 பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர். 62 கோடியே 63 லட்சத்து 7 ஆயிரத்து 173 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் 150 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தடுப்பூசி செலுத்தும் பணியில் இன்று சிறந்த நாள். 150 கோடி தடுப்பூசி என்ற சாதனையை தாண்டிய நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். நமது தடுப்பூசி திட்டம் நிறைய உயிர்களை காப்பாற்றியுள்ளது. அதேவேளை, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
நமது தடுப்பூசி செலுத்தும் திட்டம் வெற்றிகரமாக செல்ல பணியாற்றும் அனைவருக்கும் இந்தியா வாழ்த்து தெரிவிக்கிறது. டாக்டர்கள், அறிவியல் விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் நாம் நன்றி தெரிவிக்கிறோம்.
தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அனைவரும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story