மக்கள் சுடுகாட்டிற்கு சென்ற பின்னர் தான் தூக்கத்தில் இருந்து விழிப்பீர்களா? - மாநில அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி


மக்கள் சுடுகாட்டிற்கு சென்ற பின்னர் தான் தூக்கத்தில் இருந்து விழிப்பீர்களா? - மாநில அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
x
தினத்தந்தி 7 Jan 2022 9:42 PM GMT (Updated: 7 Jan 2022 9:42 PM GMT)

மக்கள் சுடுகாட்டிற்கு சென்ற பின்னர் தான் தூக்கத்தில் இருந்து விழிப்பீர்களா? என்று மாநில அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகம் அமைந்துள்ளது. கல்லூரி மற்றும் மருத்துவமனை இரண்டும் ஒருங்கே அமைந்துள்ள இங்கு கொரோனா வைரசின் மரபணு மாற்றங்களை பரிசோதனை செய்வதற்கான கருவி இல்லை என கடந்த ஆண்டு அம்மாநில ஐகோர்ட்டில் பொதுநல வழக்குத்தொடரப்பட்டது. 

மேலும், மருத்துவமனையில் போதிய மருத்துவ கருவிகள் இல்லை எனவும் அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரவி சந்திரன் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு மற்றும் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகம் மீது நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். 

மேலும், ஒமைக்ரான் தொற்று மாநிலத்திற்குள் பரவிய பின்னர் தான் கொரோனா வைரசின் மரபணு மாற்றங்களை பரிசோதனை செய்வதற்கான கருவியை மருத்துவமனை வாங்கியதா? என்பதை மருத்துவமனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

மருத்துவ உபகரணங்களை வாங்க முடியாத மாநில அரசு மற்றும் அதன் உயர்மட்ட மருத்துவ நிறுவனமான  ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தை கண்டித்த கோர்ட் மக்கள் சுடுகாட்டில் தகன மேடைக்கு சென்ற பின்னர் தான் தூக்கத்தில் இருந்து விழிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பியது.

Next Story