நாடு முழுவதும் சுழன்றடிக்கும் கொரோனா கட்டுக்குள் வருவது எப்போது?...!


நாடு முழுவதும் சுழன்றடிக்கும் கொரோனா கட்டுக்குள் வருவது எப்போது?...!
x
தினத்தந்தி 10 Jan 2022 11:41 PM GMT (Updated: 10 Jan 2022 11:41 PM GMT)

நாடு முழுவதும் சுழன்றடிக்கும் கொரோனா சூறாவளி பலி எண்ணிக்கையை குறைத்துக்கொண்டாலும், பாதிப்பை தினமும் அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகர தோன்றலான கொரோனா, இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் காலடி வைத்தபோது இப்படி ஒரு பிரளயத்தை உருவாக்கும் என யாரும் நினைக்கவில்லை. அதே ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் பலியை கொடுத்தபோது கூட நாட்கள் செல்ல செல்ல அதன் வீரியம் அதிகரிக்கும் என தோன்றவில்லை.

ஆனால் யாரும் எதிர்பார்க்காததை தான் அது வழங்கி வருகிறது. 2020-ம் ஆண்டு முழுவதும் முதல் அலையால் ஒட்டுமொத்த நாட்டையும் தலைகீழாக புரட்டிப்போட்டது.

குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பூசிகளோ இல்லாததால் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் மாண்டு விட்டனர். லட்சக்கணக்கானவர்கள் படுக்கையில் விழுந்து எழுந்தனர்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவின் வேகம் தணிந்தது. அப்படியே தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இதனால் கொரோனாவை விரட்டி விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

ஆனால் அப்போதும் எதிர்பாராததைத்தான் கொரோனா பரிசளித்தது. கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் 2-வது அலையாக தாக்க தொடங்கிய தொற்று அடுத்தடுத்த மாதங்களில் கோரத்தாண்டவமே ஆடிவிட்டது.

இந்த முறை டெல்டா, டெல்டா பிளஸ் என பல வகைகளில் உருமாறி தாக்கியது. இதனால் மக்களால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. அவ்வளவு ஏன்? மத்திய-மாநில அரசுகளும், சுகாதாரத்துறையும் கூட இந்த கண்ணுக்குத்தெரியா வைரசுக்கு முன்னால் மண்டியிட்டு விட்டன.

தடுப்பூசி பணிகள் ஒருபுறம் நடந்தாலும் பண்டிகை காலம் மற்றும் பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களால் ஏற்பட்ட மக்கள் நெரிசல்கள், கொரோனாவின் பரவலுக்கு ஏதுவாகி விட்டன.

விளைவு.... முதல் அலையில் சுமார் 1 லட்சம் மரணங்களை பரிசளித்த கொரோனா, 2-வது அலையில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட உயிர்களை கபளீகரம் செய்து விட்டது.

ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை என சுகாதார உள்கட்டமைப்பு மொத்தமும் ஆட்டம் கண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக மயான பற்றாக்குறை நிலவியதுதான் சோகத்திலும் சோகம்.

இத்தகைய வரலாற்று துயரத்துடனாவது கொரோனா ஒழியும் என்று பார்த்தால், இந்தியாவை 3-வது அலையும் பதம் பார்க்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் அப்போதே எச்சரித்தனர். எனவே தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தவும் கூறியிருந்தனர்.

அவர்கள் கணித்ததுபோலவே 3-வது அலையும் தற்போது நாட்டில் காலடி வைத்து விட்டது. இது அலையல்ல... சுனாமி என்றுதான் சொல்ல வேண்டும்.

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரானின் உந்துதலால் இந்த புத்தாண்டின் தொடக்கத்திலேயே கொரோனாவின் 3-வது அலை வீசத்தொடங்கி இருக்கிறது.

முந்தைய 2 அலைகளைப்போல இல்லாமல் பெரும் சூறாவளியாகவே சுழன்றடிக்கிறது. கடந்த மாதம் 28-ந்தேதி 9,195 ஆக இருந்த தினசரி பாதிப்பு ஒரே வாரத்தில் அதாவது கடந்த 4-ந்தேதி 58 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து விட்டது.

இது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த முந்தைய 24 மணி நேரத்தில் 1.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாதாரண பொதுமக்கள் முதல் மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், நீதிபதிகள், விளையாட்டு-அரசியல் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரையும் தனது மாயவலையில் வீழ்த்தி வருகிறது.

நாடு முழுவதும் போடப்பட்டு உள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை சுமார் 150 கோடியை எட்டியுள்ள நிலையில் கொரோனாவின் 3-வது அலை இத்தனை வேகமாக சுழன்றடிப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், 3-வது அலையில் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளதுதான். மேற்படி 24 மணி நேரத்தில் 1.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், பலி எண்ணிக்கை வெறும் 146 மட்டுமே.

அதற்காக அரசும், சுகாதாரத்துறையும், பொதுமக்களும் மெத்தனமாக இருக்கக்கூடாது என்பதுதான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும். எனவே தான் தொற்றை விரைந்து கட்டுப்படுத்த மாநில அரசுகள் தனித்தனியாக பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றன.

என்னதான் அரசும், சுகாதாரத்துறையும் தொற்றுக்கு எதிராக போராடினாலும் ஒவ்வொரு தனிமனிதனும் கொரோனாவுக்கு எதிராக ஆயுதத்தை தூக்கினால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்.

தற்போதைய நிலையில் தடுப்பூசி ஒன்று மட்டுமே தொற்றுக்கு எதிரான ஆயுதமாக உள்ளது. அதைப்போல தொற்றுக்கு எதிரான கேடயமாக முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை பின்பற்றுவதுதான்.

எனவே கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை போட்டு, பொருத்தமான நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே சுழன்றடிக்கும் சூறாவளியை கட்டுப்படுத்த முடியும்.

Next Story