கொரோனா பரவல்: முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை


கொரோனா பரவல்: முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 12 Jan 2022 12:23 AM GMT (Updated: 12 Jan 2022 12:23 AM GMT)

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி,

ஒமைக்ரான் வைரஸ் தாக்கத்தால் நாட்டில் மூன்றாவது அலை உருவாகி உள்ளது. கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையும் தினமும் ஒரு லட்சத்துக்கு மேல் அதிகரித்து வருகிறது.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளன.

முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி கடந்த 9-ந் தேதி உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், மாவட்ட அளவில் சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்குமாறும், சிறுவர்களுக்கான தடுப்பூசி பணியை விரைவுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். காணொலி வாயிலாக இக்கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

Next Story