இந்தியாவுக்குள் ஊடுருவ 400 பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருப்பு; ராணுவ தளபதி


இந்தியாவுக்குள் ஊடுருவ 400 பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருப்பு; ராணுவ தளபதி
x
தினத்தந்தி 15 Jan 2022 11:16 AM GMT (Updated: 15 Jan 2022 11:16 AM GMT)

எல்லையில் தற்போதுள்ள நிலைமையை தன்னிச்சையாக மாற்ற முயற்சிப்பவர்களை வெற்றி அடைய விட மாட்டோம் என ராணுவ தளபதி பேசினார்.

புதுடெல்லி,

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார். 

இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15-ந்தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.ராணுவ தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இந்திய ராணுவ தளபதி எம் எம் நரவனே கூறியதாவது;

இந்தியாவுக்குள் ஊடுருவ 300 முதல் 400 பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர். எல்லையில் நிலைமை கடந்த ஆண்டை விட சிறப்பாக இருந்தாலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் கொடுத்து வருகிறது. என்கவுன்ட்டரில் 144 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு சீனாவால் பதற்றம் நிலவிய நிலையில் 14-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. எல்லையில் தற்போதுள்ள நிலைமையை தன்னிச்சையாக மாற்ற முயற்சிப்பவர்களை வெற்றி அடைய விட மாட்டோம். நமது பொறுமை தன்னம்பிக்கையின் அடையாளம் ஆகும். ஆனால், இதை சோதித்து பார்க்கும் தவறை யாரும் செய்ய வேண்டாம்” என்றார். 

Next Story