கோரக்பூரில் போட்டியிட வைத்து யோகி ஆதித்யநாத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டது, பா.ஜ.க : அகிலேஷ் யாதவ்


கோரக்பூரில் போட்டியிட வைத்து யோகி ஆதித்யநாத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டது, பா.ஜ.க : அகிலேஷ் யாதவ்
x
தினத்தந்தி 15 Jan 2022 4:54 PM GMT (Updated: 15 Jan 2022 4:54 PM GMT)

யோகி ஆதித்யநாத்தை கோரக்பூரில் போட்டியிட வைத்து, அவரை பா.ஜ.க. வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டல் செய்தார்.

கோரக்பூரில் யோகி போட்டி

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை அவரது சொந்த ஊரான கோரக்பூரில் பா.ஜ.க. போட்டியிட செய்துள்ளது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் லக்னோவில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

யோகி ஆதித்யநாத் முதலில் மதுரா, அயோத்தி, தியோபந்த் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் அவரை பா.ஜ.க. வீட்டுக்கு (சொந்த தொகுதியான கோரக்பூர்) அனுப்பி வைத்து விட்டது.

‘மனமார்ந்த வாழ்த்துகள்’

அவர் கோரக்பூரைச் சேர்ந்தவர், அங்கு செல்வதற்கு அவர் மார்ச் 11-ந் தேதிக்கு டிக்கெட் பதிவு செய்து வைத்திருந்தார். (மார்ச் 10-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை). அவர் அங்கேயே தங்கி விடுவார், அவர் லக்னோ திரும்ப வேண்டிய அவசியம் இருக்காது. மனமார்ந்த வாழ்த்துகள்.

பா.ஜ.க. மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு இனி எங்கள் கட்சியில் இடம் இல்லை. ஆனாலும் அந்த கட்சியின் தலைவர் ஒருவர் எங்கள் கட்சியில் சேர இருக்கிறார்.

பா.ஜ.க.வில் இருந்து விலகிய தாராசிங் சவுகான், எங்கள் கட்சியில் விரைவில் சேருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க.வில் இருந்து மந்திரிகள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம்சிங் சைனி, 5 எம்.எல்.ஏ.க்கள் விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் ஏற்கனவே சமாஜ்வாடியில் ஐக்கியம் ஆகி இருப்பது நினைவுகூரத்தக்கது.


Next Story