கொரோனாவால் உயிரிழந்த தாய்: உடலை பார்க்க வர மறுத்த மகள்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Jan 2022 9:15 PM GMT (Updated: 18 Jan 2022 9:15 PM GMT)

கொரோனாவால் இறந்த தாயின் உடலை பார்க்க வர மகள் மறுத்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு, 

மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது கணவர் பெங்களூருவில் விமானப்படையில் பணியாற்றினார். இதனால் பாக்கியலட்சுமி அவரது கணவர் மற்றும் மகள் மதுஸ்ரீ ஆகியோர் பெங்களூரு சஞ்சய் நகரில் வசித்து வந்தனர். 

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக பணியில் இருந்தபோது பாக்கியலட்சுமியின் கணவர் உயிரிழந்தார். இதனால் பாக்கியலட்சுமிக்கு விமானப்படையில் வேலை கிடைத்திருந்தது. இதற்கிடையே மதுஸ்ரீக்கு ஒருவருடன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியலட்சுமிக்கும், மதுஸ்ரீக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் பாக்கியலட்சுமியுடன் பேசுவதை மதுஸ்ரீ தவிர்த்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக தாயும், மகளும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாக்கியலட்சுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாக்கியலட்சுமியை அவரது வீட்டின் அருகே இறைச்சிக்கடை நடத்தி வரும் ஒருவர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். மேலும் இதுகுறித்து மதுஸ்ரீயை செல்போனில் தொடர்பு கொண்டு அவர் தகவல் தெரிவித்தார். அப்போது அந்த நபரிடம் மதுஸ்ரீ சரியாக பேசாமல் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதற்கிடையே பாக்கியலட்சுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பாக்கியலட்சுமி இறந்துவிட்டார். இதுபற்றி மதுஸ்ரீக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போதும் அவர் ஆஸ்பத்திரிக்கு வர மறுத்துவிட்டார். 

இதையடுத்து போலீசார் மதுஸ்ரீயை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தனர். பின்னர் பாக்கியலட்சுமியின் உடல் மதுஸ்ரீயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் ஹெப்பாலில் உள்ள மயானத்தில் பாக்கியலட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மதுஸ்ரீயின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. மதுஸ்ரீயின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story