பெங்களூருவில் வரும் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு


பெங்களூருவில் வரும் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு
x
தினத்தந்தி 19 Jan 2022 12:38 AM GMT (Updated: 19 Jan 2022 12:38 AM GMT)

கர்நாடகாவின் பெங்களூருவில் வரும் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.



பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா 3வது அலை பரவல் உள்ளது.  தினசரி பாதிப்பு புதிய உச்சம் தொட்டு வருகிறது. பெங்களூருவில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது.

பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி, சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இன்று (19ந்தேதி) காலை 5 மணியுடன் 144 தடை உத்தரவு முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவை நீட்டித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் 19ந்தேதி காலை 5 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த 144 தடை உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

144 தடை அமலில் இருக்கும்போது பெங்களூருவில் பேரணி, ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்ணா, போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியில் 200 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல எந்த தடையும் இல்லை. மேலும், ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது தேசிய பேரிடர் மேலாண்மை, கர்நாடக நோய் பரவலை தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story