உ.பி. அரசியலில் பரபரப்பு: முலாயம் சிங்கின் மருமகள் பாஜகவில் இணைகிறார்...!


உ.பி. அரசியலில் பரபரப்பு: முலாயம் சிங்கின் மருமகள் பாஜகவில் இணைகிறார்...!
x
தினத்தந்தி 19 Jan 2022 2:35 AM GMT (Updated: 19 Jan 2022 2:35 AM GMT)

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங்கின் மருமகள் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கின் மருமகள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முலாயம் சிங்கின் இளையமகன் பர்திக் யாதவ். இவரின் மனைவி அபர்னா யாதவ். 

முலாயம் சிங்கின் மருமகளான அபர்னா இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அபர்னா பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், கட்சியில் இணைவதற்காக அவர் தற்போது டெல்லியில் உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக-சமாஜ்வாதி இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் முலாயம்சிங் யாதவின் மருமகளே பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபர்னா யாதவ் 2017-ம் ஆண்டு லக்னோ காண்ட் சட்டசபை தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story