இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உயரும் கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்
தமிழகம், மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் தமிழகம், மராட்டியம், கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மராட்டியம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளன. இந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரக் குழுக்களை அனுப்பி உள்ளோம், தொடர்ந்து நிலைமையை மதிப்பாய்வு செய்து வருகிறோம்.
சிகிச்சையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில் முதல் 10 மாநிலங்களாக, மராட்டியம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், குஜராத், ஒடிசா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகியவை உள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 15-18 வயதுக்குட்பட்ட 52% குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் இரண்டு தடுப்பூசிகளுக்கு சந்தை அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று DCGI க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேசிய கட்டுப்பாட்டாளரின் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை” என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story