உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்: கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி ..?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2022 3:33 PM GMT (Updated: 20 Jan 2022 6:28 PM GMT)

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தை யார் வெல்ல இருக்கிறார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கட்டத்திற்கும் சராசரியாக 50 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன 172 தொகுதிகள் முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவில் வருகின்றன. இதில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மற்றொரு புறம் சமாஜ்வாதி கட்சியும் கடும் போட்டியில் இறங்கி உள்ளது. 

இந்நிலையில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மைன்பூரி மாவட்டத்தில் உள்ள சமாஜ்வாடிக் கட்சியின் கோட்டையாக கருதப்படும் கர்ஹால் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மைன்பூரி மாவட்டத்தில் லோக்சபா தொகுதியில்தான் முலாயம் சிங் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றார். 5 முறை இந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முலாயம் சிங். கடந்த பல வருடமாகவே இந்தத் தொகுதி சமாஜ்வாடிக் கட்சி வசம்தான் இருக்கிறது..

இந்த நிலையில் இந்த லோக்சபா தொகுதிக்குட்பட்ட கர்ஹால் சட்டசபைத் தொகுதியில்தான் அகிலேஷ் யாதவ் போட்டியிட உள்ளார். கடந்த 3 தேர்தலாக இந்த தொகுதி சமாஜ்வாடிக் கட்சி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story