உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்; காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளர் பிரியங்கா காந்தியா...?


உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்; காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளர் பிரியங்கா காந்தியா...?
x
தினத்தந்தி 21 Jan 2022 9:06 AM GMT (Updated: 21 Jan 2022 9:06 AM GMT)

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக போட்டியிடலாம் என பிரியங்கா காந்தி சூசக முறையில் பதிலளித்து உள்ளார்.



லக்னோ:


உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ந்தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச தேர்தலில் 403 இடங்களில், வெறும் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்தமுறை பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்களை நம்பி தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறது. 

ஏற்கனவே இந்த சட்டமன்ற தேர்தலில் 40 சதவீத பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி கூறியிருந்தார்.

இந்நிலையில் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று வெளியிட்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, இந்த தேர்தல் அறிக்கையில் இருப்பது வெற்று வார்த்தைகள் கிடையாது. இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை என்பது உத்தரப்பிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும். 

நாங்கள் வெறுப்பை விதைக்க மாட்டோம். நாங்கள் மக்களை ஒன்றிணைக்கிறோம். இளைஞர்களின் வலிமையில் புதிய உத்தர பிரதேசத்தை கட்டமைக்க விரும்புகிறோம் என்று கூறினார்.  

தேர்தல் அறிக்கை குறித்து பேசிய பிரியங்கா காந்தி, உத்jர பிரதேச அரசின் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தவறிவிட்டது. நாங்கள் உ.பியில் ஜாதியை வைத்து பிரசாரம் செய்யவில்லை. உத்தர பிரதேசத்தின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம் என கூறினார்.

உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னிறுத்தப்பட கூடிய முதல்-மந்திரி வேட்பாளர் யார்? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.  இதுபற்றி நிருபர் எழுப்பிய கேள்விக்கு பிரியங்கா காந்தி அளித்த பதிலில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கூடிய வேறு யாருடைய முகமும் உங்களுக்கு தென்பட்டதா...?

ஒவ்வோர் இடத்திலும் என்னுடைய முகம் இருப்பதனை நீங்கள் காணலாம் என புன்சிரிப்புடன் பதிலளித்து உள்ளார்.  இதனால், வரவுள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில், முதல்-மந்திரி வேட்பாளராக பிரியங்கா காந்தியே முன்னிறுத்தப்பட கூடும் என அவர் மறைமுக பதிலாக அளித்துள்ளார் என்று அறியப்படுகிறது. 


Next Story