தகவல் உரிமை சட்டத்தை வலிமையாக அமல்படுத்தக்கோரி வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 4-ஐ திறம்பட செயல்படுத்தி சட்டத்தை வலிமையாக அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம்
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமல்படுத்தியது.
இந்த சட்டத்தின் 4-வது பிரிவின்படி அரசு அதிகாரிகள், தங்கள் செயல்பாடுகள் குறித்து தாங்களாகவே தகவல்களை வெளியிட வேண்டும் என்பது விதியாகும்.
இதைப்போல மேலும் பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த பிரிவில் அடங்கி இருக்கிறது.ஆனால் இந்த விதி சரியாக பின்பற்றப்படுவதில்லை என கூறப்படுகிறது.
சட்டத்தின் ஆன்மா
எனவே இந்த பிரிவை திறம்பட செயல்படுத்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தை வலிமையாக அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 4-வது பிரிவுதான் அதன் ஆன்மா எனவும், அதை வலிமையாக செயல்படுத்தாமல் இந்த சட்டம் வெறும் அலங்கார சட்டமாகவே இருக்கும் எனவும் அந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசுக்கு உத்தரவு
கே.சி.ஜெயின் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. இதில் மேற்படி மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story