நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைக்க திட்டம்


நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைக்க திட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2022 2:39 AM GMT (Updated: 24 Jan 2022 2:39 AM GMT)

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைப்பது தொடர்பாக ரெயில்வே அமைச்சகத்துடன் ஆலோசித்து வருவதாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் காலநிலை மாற்றம் அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி குறைவாக உள்ளதால் இந்தியாவில் அதன் விற்பனை குறைவாகவே உள்ளது. 

ரெயில் நிலையங்கள் போக்குவரத்துத் துறையின் முக்கிய இடமாக கருதுவதால் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு  மத்திய அரசின் வேகமாக ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்தல் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் மின்சார வாகனம் சார்ஜிங் உள்கட்டமைப்பை அமைப்பதற்கான வரைவுக் கொள்கையை நிதி ஆயோக் இந்திய ரெயில்வேக்கு தயாரித்துள்ளது. 

ரெயில்வே அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட வரைவுக் கொள்கை, 2030-க்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்ப்பான் என்ற இந்திய ரெயில்வேயின் நோக்கத்திற்கு ஏற்ப சார்ஜிங் வசதிகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்கவும் பரிந்துரைக்கிறது. 

2030க்குள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் படிப்படியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் 123 ரெயில் நிலையங்களில் உடனடியாக செயல்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.

Next Story