திருடன் என நினைத்து ஆட்டோ ஓட்டுனர் கொடூர கொலை; நீதி கேட்டு குடும்பத்தினர் போராட்டம்


திருடன் என நினைத்து ஆட்டோ ஓட்டுனர் கொடூர கொலை; நீதி கேட்டு குடும்பத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2022 9:18 AM GMT (Updated: 24 Jan 2022 9:18 AM GMT)

மராட்டியத்தில் திருடன் என சந்தேகித்து அடித்து கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராடியுள்ளனர்.



புனே,


மராட்டியத்தின் தாமு நகரை சேர்ந்தவர் ஷாருக் ஷேக்.  ஆட்டோ ஓட்டுனரான இவர், கடந்த 13ந்தேதி மும்பை நகரின் சாம்த நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்கு வந்துள்ளார்.

ஆனால், அவரை மறித்த ஒரு கும்பல் திருடன் என சந்தேகித்து கை, கால்களை கட்டி போட்டுள்ளது.  இதன்பின்பு அவரை அடித்து, உதைத்து நிர்மல் சாவல் பகுதியருகே வீசி சென்றுள்ளது.

இந்த சம்பவம் பற்றி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ பகுதிக்கு வந்துள்ளனர்.  ஷாருக் படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.  உடனடியாக அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர்.

எனினும், அடுத்த நாள் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.  இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், ஷாருக்கின் குடும்பத்தினர் கூடுதல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வெளியே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஷாருக் கொலையில் தொடர்புடைய கும்பலை சேர்ந்தவர்களின் படங்களை கொண்ட பேனர்களை ஏந்தியபடி கோஷங்களையும் எழுப்பினர்.  எனினும், உடற்கூராய்வு முடிவு பற்றி முறைப்படி குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்படும் என கூறி அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மராட்டியத்தில் திருடன் என்ற சந்தேகத்தில் ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story