தெலுங்கானாவில் வங்கி சர்வரில் ஊடுருவி ரூ.12 கோடி திருட்டு
வங்கியின் சர்வரில் சைபர் கிரைம் ஆசாமிகள் ஊடுருவி, அதில் இருந்து ரூ.12 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றிவிட்டனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு ஏ.பி.மகேஷ் கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் மராட்டியத்தில் இந்த வங்கிக்கு 45 கிளைகள் உள்ளன.
இந்நிலையில் அடையாளம் தெரியாத சைபர் கிரைம் ஆசாமிகள் ஐதராபாத்தில் இந்த வங்கியின் சர்வரில் ஊடுருவி, அதில் இருந்து ரூ.12 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றிவிட்டனர். ஐதராபாத் நகரில் நடந்த மிகப்பெரிய சைபர் மோசடியாக கருதப்படும் இதுகுறித்து நகர சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் வங்கி அதிகாரிகள் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மோசடியில் வாடிக்கையாளர்களின் பணத்துக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, எனவே அவர்கள் அச்சப்படாமல் அமைதிகாக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related Tags :
Next Story