ரெயிலுக்கு தீ வைப்பு: “மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்” - ரெயில்வே மந்திரி வேண்டுகோள்
கயா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலின் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
புதுடெல்லி,
ரெயில்வே பணிகளுக்காக ரெயில்வே தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ரெயிலுக்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் ஓடும் ரெயில் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில்வே துறை நடத்திய சிபிடி -2 தேர்வில் முறைக்கேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி கயாவில் தேர்வர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது கயா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலின் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ரெயில் பெட்டியில் தீப்பற்றி கரும்புகை வெளியேறிய காட்சிகள் பதைபதைக்க வைத்துள்ளது. நிகழ்விடத்திற்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் எழுப்பும் குறைகள் மற்றும் முறைகேடுகளை தீவிரமாக விசாரணை செய்து நிவர்த்தி செய்வோம்.
அனைத்து ரெயில்வே தலைவர்களும் மாணவர்களின் குறைகளைக் கேட்டு, அவற்றைத் தொகுத்து, குழுவிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக மின்னஞ்சல் முகவரி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று குறைகளைக் கேட்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story