"காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது" கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் சொல்கிறார்


காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் சொல்கிறார்
x
தினத்தந்தி 28 Jan 2022 8:05 AM GMT (Updated: 28 Jan 2022 8:05 AM GMT)

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் விலகி உள்ளார்.காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது என கூறி உள்ளார்.

பெங்களூரு: 

கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள சி.எம்.இப்ராகிம் எம்.எல்.சி., காங்கிரஸ் கட்சியுடனான உறவு முடிந்துவிட்டதாக என விலகல் குறித்து  அறிவித்துள்ளார்.

கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.பட்டீல். அவரது பதவி காலம் கடந்த 5-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேல்-சபை உறுப்பினருமான (எம்.எல்.சி.) சி.எம்.இப்ராகிம் காங்கிரஸ் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராக பி.கே.ஹரிபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏமாற்றமும், தலைமை மீது அதிருப்தியும் அடைந்த சி.பி.இப்ராகிம் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

எனக்குள் இருந்த நெருக்கடியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போக்கி, என்னை சுதந்திரமாக முடிவெடுக்க வைத்துள்ளார் என்பதால் நான் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். நலம்விரும்புகள், ஆதரவாளர்களுடன் கலந்துபேசி, தனது அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது குறித்து இப்ராகிம் கூறியதாவது:-

காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது. பணமில்லாமல் யாராலும் காங்கிரசில் பணியாற்ற முடியாது. இந்திரா காந்தி, நேரு போன்றோரின் காலகட்டத்தில் காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சியாக இருந்தது, ஆனால் இப்போது பணம் பறிக்கும் கட்சியாக மாறியுள்ளது, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் விரைவில் வீழ்த்தப்படும். காங்கிரஸ் கட்சி மூழ்கிவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் இனி முடிந்து போன ஒன்று.

பி.கே.ஹரிபிரசாத் ஒரு ஜூனியர். அவரின் கீழ் என்னால் எப்படி பணியாற்ற முடியும். தேவகவுடா போன்ற தலைவரை விட்டு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து சித்தராமையாவுக்காக விலகினேன். ஆனால் எனக்கு என்ன கைமாறு செய்திருக்கிறார் பார்த்தீர்களா?. மாநில மக்களும், என் நலம்விரும்பிகளும், காங்கிரசுக்கு தகுந்த பதிலளிப்பார்கள் என இம்ராகிம் கூறினார்.

1996ல் பிரதமர் தேவகவுடாவின் அமைச்சரவையில் மத்திய சுற்றுலா, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த இம்ராஹிம், 2008ம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். இப்போதும் அக்கட்சியின் குமாரசாமியுடன் தொடர்பில் அவர் இருந்து வருகிறார். எனவே மீண்டும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இப்ராகிம் இணைவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என கூறினார்.

Next Story