திருப்பதி ஏழுமலையான்: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் ஏப்ரல் 8ம் தேதி ஆன்லைனில் வெளியீடு


திருப்பதி ஏழுமலையான்: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் ஏப்ரல் 8ம் தேதி ஆன்லைனில் வெளியீடு
x
தினத்தந்தி 1 April 2022 1:23 AM GMT (Updated: 1 April 2022 1:23 AM GMT)

முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய 8-ந் தேதி ஆன்லைனில் டோக்கன்கள் வெளியிடப்படுகிறது.

திருமலை, 

கொரோனா தொற்று பரவல் குறைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களும் சாமி தரிசனம் செய்ய, 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதத்துக்கான (ஏப்ரல்) தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு வருகிற 8-ந் தேதி காலை 11 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறால் இன்று (வெள்ளிக்கிழமை) தரிசன டோக்கன்கள் வெளியிடுவதற்கு பதிலாக வருகிற 8-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஆயிரம் டோக்கன்கள் வீதம் வழங்கப்படுகிறது.

எனவே முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் வருகிற 9-ந்தேதியில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று மூலவருக்கு அபிஷேகம் நடப்பதால், அன்று ஒருநாள் மட்டும் மாலை 3 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

Next Story