காங்கிரஸ் முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கேவின் டுவிட்டர் திடீர் முடக்கம்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 April 2022 9:17 PM GMT (Updated: 24 April 2022 9:17 PM GMT)

காங்கிரஸ் முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கேவின் டுவிட்டர் கணக்கு திடீர் முடக்கப்பட்டது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை முதலில் பகிரங்கப்படுத்தியவர் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே. இந்த விவகாரத்தில் அவர் தொடர்ந்து சில தகவல்களை வெளியிட்டு வருகிறார். 

இந்த நிலையில் பிரியங்க் கார்கேவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. அந்த கணக்கை மீட்டெடுக்க முடியாத அளவுக்கு அதை முடக்கியுள்ளனர். இதை டுவிட்டர் நிர்வாகம் செய்ததா? அல்லது வேறு ஹேக்கர்கள் யாராவது செய்தார்களா? என்று தெரியவில்லை. டுவிட்டர் நிர்வாகம் இதை செய்திருந்தால் முன்கூட்டியே எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அந்த நிர்வாகத்திடம் இருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் ஹேக்கர்களால் எனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன். எனது டுவிட்டர் கணக்கு சரிசெய்யப்படும் வரை அதில் வெளியாகும் கருத்துகள் என்னுடையது அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

Next Story