சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்


சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்
x
தினத்தந்தி 7 May 2022 8:03 PM GMT (Updated: 7 May 2022 8:03 PM GMT)

கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம், மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரையை ஏற்று, சுதான்சு தூலியா, பர்திவாலா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கான ஆணை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி சுதான்சு தூலியா, உத்தரகாண்ட் ஐகோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு நியமிக்கப்படும் 2-வது நீதிபதி ஆவார். அதேபோல நீதிபதி பர்திவாலா, சுப்ரீம் கோர்ட்டுக்கு நியமிக்கப்படும் 4-வது பார்சி இனத்தவர் ஆவார். பர்திவாலா தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும்போது அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள் 3 மாதங்களாக இருக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story