குஜராத்திற்கு வரும் 11ந்தேதி கெஜ்ரிவால் பயணம்; பேரணி நடத்த திட்டம்


குஜராத்திற்கு வரும் 11ந்தேதி கெஜ்ரிவால் பயணம்; பேரணி நடத்த திட்டம்
x
தினத்தந்தி 8 May 2022 5:09 PM GMT (Updated: 8 May 2022 5:09 PM GMT)

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வரும் 11ந்தேதி குஜராத்திற்கு சென்று பேரணி ஒன்றை நடத்துகிறார்.




புதுடெல்லி,


சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி, ஆம் ஆத்மி அரசு ஆட்சியை பிடித்தது.  இதனை தொடர்ந்து, மின் கட்டண சலுகை, வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

டெல்லியை தொடர்ந்து, பஞ்சாப்பில் ஆட்சி செய்து வரும் அக்கட்சி அடுத்து குஜராத்தில் களம் காண திட்டமிட்டு உள்ளது.  குஜராத்தில் முதல்-மந்திரி புபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடந்து வருகிறது.

3 தசாப்தங்களாக அக்கட்சி குஜராத்தில் ஆட்சியில் நீடித்து வருகிறது.  இந்த நிலையில், நடப்பு ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தலை குஜராத் சந்திக்க உள்ளது.

இதனை முன்னிட்டு அரசியல் பணிகளில் பா.ஜ.க. தீவிர பணியாற்றி வருகிறது.  தேர்தலை எதிர்கொள்ள தொண்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கிறது.  அடுத்து, 6வது முறையாகவும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

இந்த சூழலில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் வருகிற 11ந்தேதி குஜராத்துக்கு செல்கிறார்.  அன்றைய தினம் அவர் ராஜ்கோட் நகரில் பேரணி ஒன்றையும் நடத்துகிறார் என அக்கட்சி இன்று தெரிவித்து உள்ளது.


Next Story