மே 21-ந் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்


மே 21-ந் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
x
தினத்தந்தி 14 May 2022 5:51 PM GMT (Updated: 14 May 2022 5:51 PM GMT)

டிஜிட்டல் முறையில் சமூக வலைதளங்களிலும் பயங்கரவாத எதிர்ப்பு உரையாடலை நாம் மேற்கொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 21-ந் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய அரசு துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

‘உடனடியாக’ என குறிப்பிடப்பட்டு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

“ஒவ்வொரு ஆண்டும் மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும். இதன் நோக்கம் நம் இளையர்களை பயங்கரவாதம் மற்றும் வன்முறையில் இருந்து அந்நியப்படுத்துவதே ஆகும். பயங்கரவாதத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது குறித்தும், அது எப்படி தேச நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதையும் விளக்கி கூற வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த உரையாடலை நாம் மேற்கொள்ள வேண்டும்.

மே 21-ந் தேதி சனிக்கிழமை வருவதால் பெரும்பாலான மத்திய அரசு அலுவலங்கள் விடுமுறையில் இருக்கும். அவர்கள் மே 20-ந் தேதி உறுதி மொழி எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story