புத்தர் பிறந்த இடத்தில் தரிசனம்: இன்று நேபாளம் செல்லும் பிரதமர் மோடி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 May 2022 11:47 PM GMT (Updated: 15 May 2022 11:47 PM GMT)

பிரதமர் மோடி இன்று நேபாளத்துக்கு செல்கிறார். புத்தர் பிறந்த இடத்தில் தரிசனம் செய்கிறார். அவர் முன்னிலையில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

காத்மாண்டு, 

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) நேபாளத்துக்கு செல்கிறார்.

பிரதமர் ஆன பிறகு அவர் நேபாளத்துக்கு செல்வது இது 5-வது தடவை ஆகும். ஆனால், புத்தர் பிறந்த ஊரான லும்பினிக்கு முதல் முறையாக செல்கிறார்.

புத்த ஜெயந்தியை முன்னிட்டு, லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் அமைந்துள்ள மாயதேவி கோவிலில் தரிசனம் செய்கிறார். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் அசோகர் லும்பினிக்கு சென்றிருந்தபோது நட்டு வைத்த கல்வெட்டை ஆதாரமாக வைத்து அது புத்தர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு, முதல்முறையாக நேபாளத்துக்கு சென்றிருந்தபோது, மாயதேவி கோவிலுக்கு ஒரு போதி மரக்கன்றை மோடி பரிசளித்து இருந்தார்.

மாயதேவி கோவில் தரிசனத்துக்கு பிறகு அருகே உள்ள புத்த துறவிகள் மடத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார். புத்த கலாசார பாரம்பரிய மையம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

பின்னர், பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் ஷெர்பகதுர் துபாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நீர்மின்சாரம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கிறார்கள்.

அவர்கள் முன்னிலையில், கல்வி, கலாசார உறவை மேலும் வலுப்படுத்தும்வகையில், இருநாடுகள் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

அதன்படி, லும்பினி புத்த பல்கலைக்கழகம், திரிபுவன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இந்திய கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளை தலா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. காத்மாண்டு பல்கலைக்கழகத்துடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது.

இதுதவிர, சென்னை ஐ.ஐ.டி. மற்றும் நேபாள கல்வி நிறுவனங்கள் இடையே 2 ஒப்பந்தங்கள் ைகயெழுத்தாகின்றன.

புத்த ஜெயந்தியை முன்னிட்டு, நேபாள அரசு ஏற்பாடு செய்துள்ள கொண்டாட்டத்தில் நேபாள பிரதமருடன் பிரதமர் ேமாடி கலந்து கொள்கிறார். அங்கு அவர் புத்தரின் சிறப்புகள் பற்றி பேசுகிறார்.

நேபாள பயணத்தையொட்டி, பிரதமர் மோடி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘‘நேபாளத்துடனான இந்திய உறவு ஒப்பில்லாதது. நூற்றாண்டுகள் பழமைமிக்க இந்த உறவை கொண்டாடவும், மேலும் வலுப்படுத்தவும் நான் செல்கிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.

Next Story