மும்பையை மராட்டியத்தில் இருந்து பிரிக்க யாருக்கு துணிவு இருக்கிறது? - தேவேந்திர பட்னாவிஸ்


மும்பையை மராட்டியத்தில் இருந்து பிரிக்க யாருக்கு துணிவு இருக்கிறது? - தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 16 May 2022 9:30 PM GMT (Updated: 16 May 2022 9:30 PM GMT)

சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியான பாபர் கட்டமைப்பை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் என தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

மும்பை, 

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனாவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்துகொண்ட பொதுக்கூட்டம் ஒரு சிரிப்பு நிகழ்ச்சியாகும். கடந்த 2½ ஆண்டுகளில் அவரது ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மக்களின் நலன் குறித்து அவர் ஒருவார்த்தை கூட பேசவில்லை.
 
புலியின் படத்தை தேர்வு செய்வதன் மூலம் ஒருவர் புலியாகிவிட முடியாது. தற்போது ஒரேஒரு புலி மட்டும் தான் உள்ளது. அது பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான். 

மராட்டியத்தில் இருந்து மும்பையை பிரிக்க சூழ்ச்சி நடப்பதாக சிவசேனா தலைவர் கூறுகிறார். மும்பையை மராட்டியத்தில் இருந்து பிரிக்க யாருக்கு துணிவு இருக்கிறது? உங்கள் ஊழல் மற்றும் தவறான செயல்களில் இருந்து மும்பையை விடுவிக்க விரும்புகிறோம். 

சிவசேனா என்றால் மும்பை, மராட்டியம் அல்லது இந்துத்வா என்று அர்த்தமில்லை. உங்கள் கூட்டணி ஆட்சி எனும் பாபர் மசூதி கட்டிடத்தை இடிக்கும் வரை நான் ஓயமாட்டேன். 
அனுமன் பஜனை செய்வதை தேசத்துரோகம் என்று கூறுவதும், அவுரங்கசீப்பின் சமாதிக்கு செல்வதை நெறிமுறை என்று கூறுவதும் வெட்கக்கேடானது.

மாநிலத்தில் நடைபெற்ற கொரோனா இறப்பு, பால்கரில் நடைபெற்ற சாதுக்கள் கொலை சம்பவம், தானே தொழில் அதிபர் ஹிரன் மன்சுக் கொலை, முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகள், தேசியவாத காங்கிரஸ் மந்திரி நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்தது ஆகியவற்றை பற்றியெல்லாம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஏன் தனது உரையில் பேசவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story