உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு


உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு
x

உத்தரகாண்டில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்து உள்ளார்.



டேராடூன்,



மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்டின் யமுனோத்ரி நோக்கி புனித யாத்ரீகர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர்.

பேருந்து யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் பலர் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. பேருந்து விபத்தில் சிக்கியதற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமியுடன் தொடர்பு கொண்டு பேசினேன். காயமடைந்த நபர்களை பாதுகாப்புடன் மீட்டு, போதிய சிகிச்சை அளிக்க கேட்டு கொண்டேன். தமியுடன் தொடர்ந்து நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று முதல்-மந்திரி தமியும் பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று நேரில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story