ஆந்திரா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 லட்சம் மாணவர்கள் தோல்வி - 34 பேர் தற்கொலை


ஆந்திரா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 லட்சம் மாணவர்கள் தோல்வி - 34 பேர் தற்கொலை
x

Image Source : PTI

தினத்தந்தி 10 Jun 2022 4:59 AM GMT (Updated: 10 Jun 2022 5:00 AM GMT)

ஆந்திராவில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த 34 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

ஆந்திரா:

ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. ஆந்திராவில் 13 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். கடந்த 3-ந் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

தேர்வில் 70.70 சதவீத மாணவிகளும், 64.02 சதவீத மாணவர்களும் வெற்றி பெற்றனர். 4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். 2 லட்சம் மாணவ மாணவிகள் தோல்வி அடைந்தனர். இதில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகள் விரக்தியடைந்து 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

10-வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 34 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆறுதல் கூறினார்.

அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நாரா லோகேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது.


Next Story