கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது; 2 வாலிபர்கள் சாவு


கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது; 2 வாலிபர்கள் சாவு
x

கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து 2 வாலிபர்கள் பலியானார்கள்.

சிக்கமகளூரு: சித்ரதுர்கா தாலுகா கோரலகுண்டே கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார்(வயது 28), ஒபலப்பா(26). இவர்கள் உள்பட 3 பேர் நேற்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக வெளியே சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் வேதாவதி ஆற்று கால்வாய் செல்லும் ரோட்டை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் பாய்ந்தது. இதில் 3 பேரும், கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அப்போது குமார், ஒபலப்பாவுடன் வந்த வாலிபர் நீச்சல் அடித்து கரைக்கு வந்து உயிர் தப்பினார். ஆனால் நீச்சல் தெரியாததால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். மோட்டார் சைக்கிள் கால்வாயின் ஓரத்தில் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பரமசாகர் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் 2 பேரின் உடல்களும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் 2 பேரின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து பரமசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story