ஆணவத்தை காட்டும் பா.ஜனதாவுக்கு சாதாரண மக்கள் பாடம் புகட்டுவார்கள்-சரத்பவார் எச்சரிக்கை


ஆணவத்தை காட்டும் பா.ஜனதாவுக்கு சாதாரண மக்கள் பாடம் புகட்டுவார்கள்-சரத்பவார் எச்சரிக்கை
x

ஆட்சி, அதிகார ஆணவத்தை காட்டும் பா.ஜனதாவுக்கு சாதாரண மக்கள் பாடம் புகட்டுவார்கள் என சரத்பவார் எச்சரித்து உள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மராட்டிய மாநிலம் துலே பகுதியில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது:- பிரிட்டீஷ் பேரரசில் சூரியன் அஸ்தமனமாகாது என்ற பழமொழி உண்டு. ஆனால் அவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் கூட சாதாராண மக்கள் ஒன்று கூடியதால், அது உடைந்தது. அதே போல ஆட்சி அதிகார ஆணவத்தை காட்டும் பா.ஜனதாவுக்கு சாதாரண மக்களால் பாடம் புகட்ட முடியும். தனது கட்சி எம்.பி. பேசியதற்காக தனது பெயர் இழுக்கப்படுவது ஏன் சோனியா காந்தி பா.ஜனதா எம்.பி.யிடம் கேட்கிறார். அதற்காக அவர் முற்றுகையிடப்படுகிறார்.

ஒரு எம்.பி. ஜனாதிபதி குறித்து தவறாக பேசுகிறார். பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அதற்கு சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா விரும்புகிறது. சோனியா காந்தி பா.ஜனதா எம்.பி., மந்திரிகளால் முற்றுகையிடப்படுகிறார். நமது எம்.பி. (சுப்ரியா சுலே) அவரை பத்திரமாக கார் வரை கொண்டு சென்றுவிட்டார். அல்லது அவருக்கு எதாவது நடந்து இருக்கும். இது பா.ஜனதாவின் ஆட்சி அதிகார ஆணவம். பா.ஜனதாவுடன் ஒத்து போகவில்லை எனில் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி 2½ ஆண்டுகளாக மராட்டியத்தில் சபாநாயகர் தேர்தலை நடத்த அனுமதிக்கவில்லை. ஆனால் புதிய அரசு பதவி ஏற்ற 2 நாளில் அதற்கு அனுமதி வழங்கினார். ஒரு கவர்னர் இதுபோல நடந்து கொண்டால் ஜனநாயகத்திற்கு என்ன நடக்கும்?. ஜனநாயகம், அரசியல் அமைப்பை என்ன விலை கொடுத்தாலும், பாதுகாப்பது நமது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story