இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 3 பாகிஸ்தான் படகுகள் பறிமுதல்


இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 3 பாகிஸ்தான் படகுகள் பறிமுதல்
x

பாகிஸ்தான் மீனவர்களின் 3 படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

ஆமதாபாத்,

குஜராத்தின் கட்ச் கடற்பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) நேற்று படகில் ரோந்து கொன்று கொண்டிருந்தனர். அப்போது ஹராமி நல்லா பகுதியில் பாகிஸ்தான் மீனவர்கள் சிலர் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்திருப்பதை வீரர்கள் கண்டறிந்தனர். சுமார் 15 முதல் 20 கி.மீ. தூரத்துக்கு இந்திய பகுதிக்குள் வந்திருந்த பாகிஸ்தான் மீனவர்கள், இந்திய படையினரை கண்டதும் தங்கள் படகுகளை விட்டுவிட்டு பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் தப்பி சென்றனர்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மீனவர்களின் 3 படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய பாகிஸ்தான் மீனவர்களை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஹராமி நல்லாவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் பாகிஸ்தான் மீனவர்கள் அங்கே அத்துமீறி மீன்பிடிப்பதும், இந்திய எல்லை பாதுகாப்பு படையினரை கண்டதும் தங்கள் படகுகளை விட்டுவிட்டு தப்பி ஓடுவதும் வழக்கமாக நடந்து வருவதாக பி.எஸ்.எப். வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story