அங்கித் திவாரியை விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை ரிட் மனு மீது நாளை விசாரணை


அங்கித் திவாரியை விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை ரிட் மனு மீது நாளை விசாரணை
x
தினத்தந்தி 23 Jan 2024 10:16 PM GMT (Updated: 24 Jan 2024 8:30 AM GMT)

அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

புதுடெல்லி,

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி துணை சூப்பிரண்டு டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2018-ம் ஆண்டு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு வந்து இருப்பதாக கூறி, மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதில் ரூ.20 லட்சத்தை நத்தம் அருகே வாங்கிய அவர், பின்னர் திண்டுக்கல்லுக்கு வந்து ரூ.20 லட்சத்தை வாங்கிய போது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அரசு டாக்டரிடம் லஞ்சம் வாங்கியதில் வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று அங்கித் திவாரியை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு அமலாக்கத்துறையினர் கடந்த 2-ந்தேதி திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அங்கித் திவாரி, நீதிமன்ற காவலில் இருப்பதால் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.இதனிடையே, அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (ஜனவரி 25) விசாரிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Next Story