கெஜ்ரிவாலை ஹிட்லர் என தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர்; கூட்டணியில் சலசலப்பு


கெஜ்ரிவாலை ஹிட்லர் என தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர்; கூட்டணியில் சலசலப்பு
x
தினத்தந்தி 17 Jan 2024 3:29 PM GMT (Updated: 18 Jan 2024 8:00 AM GMT)

சண்டிகார் காங்கிரசை சேர்ந்த பிரதாப் சிங் பாஜ்வா வெளியிட்ட செய்தியில், பஞ்சாப்பில் சர்வாதிகார அரசு நடக்கிறது என குறிப்பிட்டார்.

சண்டிகார்,

நாட்டில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக 25-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி மக்களவை தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களான முறையே பவன் பன்சால் மற்றும் ராகவ் சத்தா ஆகியோர் சண்டிகாரில் இன்று நேரில் சந்தித்து பேசி கொண்டனர்.

அப்போது எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்து, இந்தியா கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய இருவரும், தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற விட கூடாது என்பதற்கான முடிவுகள் மற்றும் உணர்வுகளை அமல்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கிய முதன்மையான கட்சிகள் என தெரிவித்தனர்.

நாம் 3 நிலைகளிலும் இணைந்து வெற்றி பெற்று, நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிரான பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பன்சாலின் இந்த பதிவுக்கு ராகவும் ஒப்புதல் அளிக்கும் வகையில் மற்றொரு பதிவை வெளியிட்டார்.

இந்த சூழலில், சண்டிகார் காங்கிரசை சேர்ந்த பிரதாப் சிங் பாஜ்வா வெளியிட்ட செய்தியில், பஞ்சாப்பில் சர்வாதிகார அரசு நடக்கிறது என குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகங்களில் இருந்து அம்பேத்கார் மற்றும் பகத் சிங் படங்களை எடுத்து விட்டு, அதற்கு பதிலாக ஹிட்லர் படம் ஒன்றை வையுங்கள். அதனை நீங்கள் கவனத்துடன் உற்று நோக்கினால், அவர்களுடைய (ஆம் ஆத்மி கட்சியின்) தலைவர்களில் ஒருவருடன் பொருந்தியிருக்கும் என தெரிவித்து உள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு இடையே தேர்தல் ஒப்பந்தம் ஒன்று ஏற்பட கூடிய சூழலில், இதுபோன்ற மோதல்கள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.


Next Story