காஷ்மீர் சுரங்கப்பாதை விபத்து; மீட்புப்பணி நிறைவு! இடிபாடுகளில் புதைந்திருந்த தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன!


காஷ்மீர் சுரங்கப்பாதை விபத்து; மீட்புப்பணி நிறைவு! இடிபாடுகளில் புதைந்திருந்த தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன!
x

மீதமுள்ள 10 பேரின் உடல்களும் இன்று மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்துக்கு உட்பட்ட கூனி நல்லா பகுதிக்கு அருகே புதிதாக சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வரும் இந்த பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு-பகலாக பணியாற்றி வருகின்றனர். இதில் ராட்சத எந்திரங்கள் மற்றும் லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இரவு சுமார் 10.15 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கே பணியில் இருந்த 13 தொழிலாளர்கள் சுரங்கப்பாதை இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர்.

உடனே சக தொழிலாளர்கள் அதில் 3 பேரை மீட்டனர். தகவல் அறிந்து, கூனி நுல்லா அருகே 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முகாமிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவிலேயே தொடங்கிய மீட்புப் பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. தொழிலாளர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இந்நிலையில், மீதமுள்ள 10 பேரின் உடல்களும் இன்று மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீட்புப்பணி முடிந்தது. உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன.

உயிரிழந்த 10 பேரில் 5 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் அசாம், இருவர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இருவர் உள்ளூர் தொழிலாளர்கள் ஆவர். இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் மூலம் இழப்பீடு வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story