கேரளா: ஒரே மாதத்தில் ரூ.100 கோடிக்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை..!!


கேரளா: ஒரே மாதத்தில் ரூ.100 கோடிக்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை..!!
x

கோப்புப்படம்

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.25 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், லாட்டரி சீட்டுகள் விற்பனை ஒரே மாதத்தில் ரூ.100 கோடியை கடந்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள அரசின் லாட்டரி இயக்குனரகம் சார்பில் வாரத்தில் 7 நாட்கள் மட்டுமின்றி, விஷூ, கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சிறப்பு பம்பர் குலுக்கல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லாட்டரிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

அதன்படி ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையைெயாட்டி சிறப்பு ஓணம் பம்பம் லாட்டரியை வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை இந்த ஓணம் பம்பர் லாட்டரியின் பரிசு தொகை அதிகபட்சமாக ரூ.12 கோடியாக இருந்தது.

இந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு தொகை ரூ.25 கோடியாக அறிவிக்கப்பட்டது. இது லாட்டரி பிரியர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பம்பர் லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும்.

முதல் கட்டமாக அச்சடிக்கப்பட்ட 30 லட்சம் சீட்டுகளில் இதுவரை 25 லட்சம் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஓணம் பம்பர் லாட்டரி வெளியிட்ட ஒரே மாதத்தில் ரூ.100 கோடிக்கு சீட்டுகள் விற்பனை நடந்துள்ளது. இந்த லாட்டரியின் குலுக்கல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் குலுக்கலுக்கு இன்னும் 20 நாட்களுக்கு மேல் இருப்பதால் இனி வரும் நாட்களில் அதிக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மேலும் 30 லட்சம் லாட்டரி சீட்டுகளை அச்சடிக்க கேரள லாட்டரி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

இந்த குலுக்கல் மூலமாக, முதல் பரிசு ரூ.25 கோடி உள்பட மொத்தம் ரூ.126 கோடியே 31 லட்சம் மதிப்பிலான பரிசு தொகை வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story