காவிரி விவகாரத்தில் சமரசமில்லை - கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு


காவிரி விவகாரத்தில் சமரசமில்லை - கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு
x

காவிரி விவகாரத்தில் கர்நாடகா மாநில அரசின் உரிமையை காக்க சட்டப்போராட்டம் தொடரும் என கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், காவிரி வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.

அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகிய 3 பேர் அடங்கிய புதிய அமர்வை காவிரி வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. இந்த வழக்கு 57 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், வரும் 25ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் புதிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரியும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, ஜேடி(எஸ்) தலைவர் எச்டி குமாரசாமி, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, மக்களவை எம்பி சுமலதா அம்பரீஷ் மற்றும் பல தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தநிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசின் உரிமையை காக்க சட்டப்போராட்டம் தொடரும். காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காங்கிரஸ் அரசு பாதுகாக்கும். அனைத்துக்கட்சி தலைவர்கள் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.


Next Story